விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது. ஓய்வு பெற்ற சச்சின் தெண்டுல்கர் கண்ணீருடன் பேசினார். அவர் கூறியதாவது:–
1999–ஆம் ஆண்டு எனது தந்தை இறந்தார். இந்த நேரத்தில் அவர் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஏக்கமாக இருக்கிறது. நான் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பதற்கு தந்தையே காரணம். அவர் தற்போது இல்லாதது எனக்கு வருத்தமாக உள்ளது. அடுத்தது எனது தாய். அவரும் எனது ஆரோக்கியம், முன்னேற்றத்துக்கு உதவியாக இருந்தார்.
அஞ்சலியை திருமணம் செய்து கொண்டது எனது வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான விஷயமாகும். எனக்கு ஆதரவாக இருந்த ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முன்னாள், இன்னாள் வீரர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
இவ்வாறு தெண்டுல்கர் உருக்கமாக பேசினார்.
கிரிக்கெட் உலகின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் ஆடி வந்த அவர் தனது 200–வது டெஸ்டோடு ஓய்வு பெறுவதாக கடந்த மாதம் அறிவித்து இருந்தார்.
அவரது 200–வது மற்றும் கடைசி போட்டி சொந்த மைதானமான மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்தது. தனது கடைசி டெஸ்டில் அவர் மிகவும் அபாரமாக விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 118 பந்துகளில் 12 பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்தார்.
இன்றைய ஆட்டத்தில் கேப்டன் டோனி அவரை பந்துவீச அழைத்தார். ரசிகர்களின் பலத்த கரகோஷத்துக்கு இடையே தெண்டுல்கர் 2 ஓவரை வீசினார். அவரது கடைசி பந்துவீச்சு என்பதால் அனைவருமே பாராட்டினர்.
இந்திய அணி வெற்றியை பெற்றதும் அவர் ஸ்டம்பை கையில் எடுத்து வெற்றியை பகிர்ந்தார். இந்திய வீரர்கள், வெஸ்ட்இண்டீஸ் வீரர்கள் அனைவரும் தெண்டுல்கரை கட்டி தழுவி பாராட்டினார்கள்.
அவர் மைதானத்தை சுற்றி வலம் வந்தார். ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர். மைதானத்தை விட்டு வெளியே வரும் போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அதை தொடர்ந்து தெண்டுல்கருக்கு மைதானத்தில் பாராட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, மகன் அர்ஜூன் பங்கேற்றனர்.
அவருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. பாராட்டு விழாவில் தெண்டுல்கர் பேசும்போது, தனக்காக பாடுபட்ட குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், சக வீரர்கள், மு ன்னாள் வீரர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது அவரது கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. மனைவி அஞ்சலியும், தெண்டுல்கரின் உருக்கமான பேச்சை கேட்டு அழுதார். கண்ணீருடன் விடை பெற்ற தெண்டுல்கருக்கு மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் உற்சாக ஆரவாரம்
செய்தனர்.
மைதானத்தை சுற்றி வந்த போதும், பேச ஆரம்பித்த போது ரசிகர்களின் கரவொலி அதிகமாக இருந்தது. தங்களது அபிமான நாயகனின் ஆட்டத்தை இனி பார்க்க இயலாதே என்ற வருத்தத்தில் ஏராளமான ரசிகர்கள் கண்ணீர் விட்டனர்.
40 வயதான தெண்டுல்கர் தனது 16 வயதில் 1989–ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். அவரது 24 ஆண்டு கால சகாப்தம் இன்றுடன் முடிந்தது.
கிரிக்கெட்டில் அவர் ஏராளமான உலக சாதனைகள் படைத்துள்ளார். அதனால் தான் அவரை கிரிக்கெட்டின் கடவுள், பிதாமகன், சகாப்தம் என்று அழைக்கிறோம்.
தெண்டுல்கருக்கு நிகரான வீரர் யாரும் இல்லை. அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று சொன்னால் அது மிகையாகாது.
தெண்டுல்கர் தேசிய கொடியுடன் மைதானத்தை சுற்றி வந்தார். அவரது மனைவி, மகள், மகன் ஆகியோருடன் வீரர்களும், மைதான நிர்வாகிகளும் போலீசாரும் உடன் வந்தனர்.
அப்போது கேப்டன் டோனி, துணை கேப்டன் கோலி ஆகியோர் தெண்டுல்கரை தோளில் சுமந்து வந்தனர். இது ரசிகர்களை பரவசப்படுத்தியது. அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஆடு களத்தை தொட்டு வணங்கினார்
வீரர்களுடன் மைதானத்தை சுற்றி வந்த தெண்டுல்கர் பின்னர் ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். அப்போது கண்ணீர் மல்க ஆடுகளத்தை இரண்டு கைகளாலும் தொட்டு வணங்கினார்.
கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கரின் 200–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.
தெண்டுல்கரின் பேட்டிங்கை காலையில் பார்க்கலாம் என்று ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு மிகச் சிறிய ஏமாற்றமே இருந்தது. ஆனாலும் மாலையிலேயே அவரது ஆட்டத்தை பார்க்க முடிந்ததால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.
காலையில் பீல்டிங் செய்வதற்காக மைதானத்திற்கு நுழைந்தபோது 32 ஆயிரம் ரசிகர்களும் எழுந்து கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணி எளிதில் ஆல் அவுட் ஆனதுமே இந்தியா பேட்டிங் செய்தது.
பிற்பகல் 3.30 மணியளவில் தெண்டுல்கர் பேட்டிங் செய்ய களம் இறங்கியபோது வின்னை தொடும் அளவுக்கு ரசிகர்கள் உற்சாக குரல் கொடுத்தனர். சச்சின்...சிச்சின் என்று உற்சாக குரல் கொடுத்தனர். அவர் ஒவ்வொரு பந்தையும் சந்திக்கும் போது ரசிகர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தனர். பவுண்டரி அடித்தபோது ரசிகர்களின் ஆரவாரத்துக்கு அளவே இல்லை. நேற்றைய ஆட்டத்தின் முடிவில் அவர் 73 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆடுகளத்தை விட்டு வெளியே செல்லும் போது ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தி காட்டினார்.
இன்று 2–வது நாளில் களம் இறங்கும் போதும் ரசிகர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர் 50–வது ரன்னை எடுத்த போது அரங்கமே அதிரும் வகையில் கைதட்டல் இருந்தது.
பார்வையாளர் வரிசையில் இருந்த நடிகர் அமீர்கான் உள்பட முக்கிய வி.ஐ.பி.க்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்து தெண்டுல்கரை உற்சாகப்படுத்தினர்.

































.jpg)











No comments:
Post a Comment